கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

அமைச்சர் ஆனந்தின் பேச்சு வைரலாகி த.வெ.க. சார்பில் போட்டியிட தேர்தலில் சீட் கேட்ட இயக்குநர் யார்? என்பது பேசும் பொருளானது.
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
Published on

கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த ஒரு தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

சட்டசபையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதல்-அமைச்சர் விஜய்யிடம் பிரபல இயக்குநர் ஒருவர் சீட் கேட்டார். ஆனால் அவர் கேட்ட தொகுதியில் நீண்ட காலமாக கட்சியில் பணியாற்றி வரும் மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் இயக்குநரிடம் கூறிவிட்டதாக அமைச்சர் என்.ஆனந்த் பேசினார். அமைச்சர் ஆனந்த் பேசிக்கொண்டிருந்தபோது, வேளாண் துறை அமைச்சர் வினோத் அருகில் இருந்த கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷை சுட்டிக்காட்டிய வீடியோ வைரலானது.

அவரது பேச்சு வைரலாகி த.வெ.க. சார்பில் போட்டியிட தேர்தலில் சீட் கேட்ட இயக்குநர் யார்? என்பது பேசும் பொருளானது. இயக்குநர் கேட்ட தொகுதி அமைச்சர் விக்னேசின் கிணத்துக்கடவு தொகுதி என தகவல் பரவியது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “நான் ஏன் அதை கேட்க வேண்டும். அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” என பதில் அளித்தார். இதன் மூலம், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திடம் தாம் தொகுதி கேட்டதாக வெளியான தகவலை லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார்.

வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்

‘மாநகரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இவர் நடித்த ‘டிசி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com