தியேட்டரில் சாமி ஆடுவதற்கு காசு கொடுத்தோமா? - “கருப்பு” பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது.
தியேட்டரில் சாமி ஆடுவதற்கு காசு கொடுத்தோமா? -  “கருப்பு” பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல்வேறு திரையரங்குகளுக்கும் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. திருப்பூருக்குச் சென்றவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடையே ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “எனக்குச் சாமி பக்தி அதிகம். எல்லாருக்கும், ரெண்டு படம்தான் பண்ணியிருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணல. ரெண்டு சாமி படம் பண்ணியிருக்கேன். நல்ல படம் பண்ணினால் மனசுல நின்னுடும்னு நினைக்கிறேன். நிறைய மற்ற கதைகளும் இருக்கு. இப்போ சாமி படம் பண்ணதுல எனக்குச் சந்தோஷம்தான். கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச் சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்குக் கிடையாது. எந்த ஊரா இருந்தாலும், ஊரை விட்டு வெளிய போகும் போதோ, ஊருக்கு வரும் போதோ கருப்பசாமியை வணங்கிட்டுதான் போவாங்க.

அப்படி மக்கள் அனைவரும் அவங்களுடைய சாமியாக நினைச்சுப் படத்தை வந்து பார்த்து, கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு." என்றவர், "பேமிலி ஆடியன்ஸுக்காகதான் படம் பண்ணினேன்.விமர்சனம் பண்றவங்களுக்கு, ஆன்லைன்ல இருக்கிறவங்களுக்காக நான் படம் பண்ணல. நான் படம் ரிலீஸ்க்கு முன்னாடியே இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தேன். இது மக்களுக்குப் பண்ணின படம். அதனால, மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சில பேர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டர்ல சாமி ஆடுறதுக்கு ஆள் அனுப்பிடுவாங்கனு சொன்னாங்க. எங்களாலேயே இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பியிருக்க முடியாது. மக்களே இந்த படத்தை அவங்க படமா நினைச்சுக் கொண்டாடுறதுதான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கு” எனக் கூறியிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com