

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார். இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் அட்லீக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் அட்லீ. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்து, அங்கேயும் தான் ஒரு ஹிட் இயக்குநர் என்று நிரூபித்து விட்டார் அட்லீ. தற்போது அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான ‘ராக்கா’வை இயக்கிவருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தனது காதலி மற்றும் நடிகையுமான பிரியாவை கரம்பிடித்தார் அட்லீ. இந்த தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்தார். அதனை தொடர்ந்து மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிழச்சியையும் நடத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தான் அட்லீ - பிரியா தம்பதி இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். பெண் குழந்தை பிறந்திருப்பதற்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும், இந்த தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.