சிறந்த நடிகருக்கான விருது வென்ற சசிகுமாரை பாராட்டிய இயக்குநர் பாலா

விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 11ந் தேதியில் இருந்து 19ந் தேதி வரை நடைபெற்றது.
அந்த விழாவில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மேலும், தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி, பாட்ஷா, 3பி.எச்.கே. என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட்டன.
இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு நடத்திய இந்த விழாவில் இன்று நடிகர் சசிகுமாருக்கு டூரிஸ்டு பேமிலி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார். இது மட்டும் இல்லாமல், சசிகுமாருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தும் வாழ்த்தி உள்ளார்.
அவர் எழுதிய பாராட்டு மடலில், "பேரன்பு சசி. சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன் பேராற்றல் கொண்டவன்.
கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.
உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அண்ணன் பாலா: மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்கள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.
இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் "சம்பவக்காரன் சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்.
அண்ணனாக மகிழ்ந்து, பாலா" என்று குறிப்பிட்டுள்ளார்.






