இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை
Published on

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது.

இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து, இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com