"வீர தீர சூரன்" படத்தின் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இயக்குனர்

"வீர தீர சூரன்" படம் மாலையில் இருந்து வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
"வீர தீர சூரன்" படத்தின் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இயக்குனர்
Published on

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மும்பையை சேர்ந்த பி4யு என்ற நிறுவனம், வீர தீர சூரன் 2 படத்தின் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் டெல்லி ஐகோர்ட்டு படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

அதாவது, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பி4யு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார். ஆனால் படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதால் படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் படக்குழு பி4யூ நிறுவனத்துக்கு ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்குத் நீடித்து நீதி மன்றம் உத்தரவிட்டது. பின்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி பி4யூ நிறுவனத்துடன் சுமூகமாக பேச்சு வார்த்தை முடிந்து புது ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். அதனடிப்படையில் படத்திற்கு தடையை நீதிமன்றம் நீக்கியது.

இந்த நிலையில் இப்படம் மாலையில் இருந்து வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "வீர தீர சூரன் மாலையில் இருந்து தியேட்டரில் திரையிடப்படுகிறது. எங்க அப்பா காலையில தியேட்டருக்கு போய்டு டிக்கெட் எடுப்பதற்காக நின்னு ஷோ கேன்சல் ஆனதும் திரும்பி வீட்டுக்கு போயிருக்கிறார். அதில் இருந்து விக்ரம் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் எவ்வளவு இன்னல்களை இது உண்டாகியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் அனைவரிடமும் படக்குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். காலையில் இருந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கும் இந்த பிரச்சனையில் உறுதிணையாக நின்ற தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி" என்றார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமும் தங்களது எக்ஸ் பக்கத்தில் படம் இப்போது தியேட்டரில் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதாகப் பதிவிட்டுள்ளது. மேலும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படம் மாலையில் இருந்து திரையிடப்படுவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com