“நூறு சாமி” படக்கதை குறித்து பகிர்ந்த இயக்குநர் சசி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் “நூறு சாமி” படம் மே 1ம் தேதி வெளியாகிறது.
“நூறு சாமி” படக்கதை குறித்து பகிர்ந்த இயக்குநர் சசி
Published on

இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது இப்படம். இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்போது ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், முனீஸ்காந்த், பக்ஸ், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு இளைஞனுக்கு தந்தையாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுவாசிகா நடிக்கிறார். இப்படம் மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

‘நூறு சாமி’ படம் குறித்து இயக்குனர் சசி, “அம்மாவை தெய்வம், கடவுள், சாமி என்று ஆராதித்துக் கொண்டாடுகிறோம். ஆனால், 'அவர்களை உயிராகவும் பாருங்கள்' என்று சொல்கிறத படம் இது ஒரு மகன், தன் அம்மாவை சாமியாக நினைத்தால் அது 'பிச்சைக்காரன்' ஒரு மகன், தன் அம்மாவை ஒரு மனுஷியாக நினைத்தால் அது 'நூறு சாமி'. காலம் காலமாக கட்டமைக்கப்பட்டவற்றை உடைத்து நெஞ்சை உலுக்கும் விதத்தில் கேள்வி கேட்கிறது இந்தப் படம். பேரன்போடும், பெருந்துணிவோடும் ஒரு அம்மாவைக் கட்டமைக்க முடியுமா என்று முயற்சி செய்திருக்கிறேன்.

இந்தக் கதையை விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, நெகிழ்ந்தார். தன்னைவிட சுவாசிகாவுக்கு சற்றுக் கூடுதல் வாய்ப்பு என்றாலும், இதில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த 'பிச்சைக்காரனை'விடவும் இந்த 'நூறு சாமி' மிகவும் சிறப்பான இடத்தைத் தொடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

'லப்பர் பந்து' பார்த்த பிறகு சுவாசிகாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த கேரக்டருக்கு மிகவும் அமைந்து வந்தார். இதற்குப் பிறகு அவர் இன்னும் எல்லோரின் மனதிலும் ஒட்டிக் கொள்வார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு ஒரு பந்தத்தை உணரவைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அப்படியே கேரக்டரில் ஒன்றிப்போய் அற்புதமாக நடித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார் சசி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com