உங்கள் விமர்சனத்தை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள் - சரத்குமார் வேண்டுகோள்

முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'கண்ணப்பா' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
மோகன்பாபு தயாரித்து முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் மோகன்லால், பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, அக் ஷய் குமார், சரத்குமார், மதுபாலா, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் 'கண்ணப்பா'. பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது.
இதற்கிடையில் சென்னையில் நடந்த பட விழாவில் சரத்குமார் பேசும்போது, "சரித்திரங்களையும், இதிகாசங்களையும் நாம் இப்போதைய தலைமுறையினருக்கு சொல்ல மறந்துவிடுகிறோம். இதனை தெரிந்துகொள்ள ஆர்வத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும். 'பொன்னியின் செல்வன்' நாவலை இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அந்த படத்தை மணிரத்னம் எடுத்தார். அதுபோல தான் கண்ணப்ப நாயனாரின் கதை இப்போது 'கண்ணப்பா' என்ற படமாக தயாராகி இருக்கிறது.
பக்தி இன்றைக்கு எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. துன்பமான சூழலில் கோவில்களை நோக்கி நாம் செல்வோம். எம்மதமாக இருந்தாலும் இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை சொல்லவேண்டியதே நமக்கு கடமையாக இருக்கிறது. கால ஓட்டத்தில் பொருளாதாரத்தில் உயரும்போது மகாத்மா காந்தியையே யார் என கேள்வி கேட்கிறார்கள்.
ரசிகர்கள் எல்லா படத்தையும் பாருங்கள். அதேவேளை உங்கள் விமர்சனத்தை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானது. அப்போதுதான் திரையுலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்'' என்றார்.






