

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் தனது கணவர் சோஹைல் கட்டாரியாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து, கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கொண்டு வரும் அவர், தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தன்னை குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள் தொடர்பாக ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவாக பிரபலங்கள் என்றாலே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பிரபலங்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது, அவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் உணர வேண்டும்," என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ஏற்கனவே நடந்த விஷயங்களை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் இனி நடக்கப்போகும் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொள்ள முடியும். கடந்த காலத்தையே நினைத்து முடங்கிக் கிடப்பது முட்டாள்தனம். எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதே முக்கியம்," என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.