போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை
Published on

சென்னை,

போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில், காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) செல்போன் எண்ணும் இருந்தது. இதனையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான அலிகான் துக்ளக் உட்பட 7 பேர் சென்னை அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com