‘டான் 3’ சர்ச்சை எதிரொலி: ரன்வீர் சிங் படங்களில் வேலை செய்ய மாட்டோம்- தொழிலாளர்கள் புறக்கணிப்பு

மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இனி ரன்வீர் சிங் நடிக்கும் படங்களில் பணியாற்ற மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
‘டான் 3’ சர்ச்சை எதிரொலி: ரன்வீர் சிங் படங்களில் வேலை செய்ய மாட்டோம்- தொழிலாளர்கள் புறக்கணிப்பு
Published on

மும்பை,

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை செய்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரன்வீர் சிங் இயக்குனர் பர்ஹான் அக்தரின் டான் 3 படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், ’டான் 3’ படத்துக்கு பதிலாக ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகும் ‘ப்ராளே’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘டான் 3’ திரைப்படத்திலிருந்து கடைசி நேரத்தில் நடிகர் ரன்வீர் சிங் விலகியதைத் தொடர்ந்து, அவரின் படங்களில் இனி பணியாற்ற மாட்டோம் என்று மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு தரப்பில் கூறியதாவது:- இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்கிடம் பேசுவதற்காக, 10 நாட்களுக்கு ஒருமுறை மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், மேலும் மூன்று நினைவூட்டல்களும் அனுப்பப்பட்டன. ஆனால், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ரன்வீர் சிங் தரப்பு அலட்சியம் காட்டியதால், கூட்டமைப்பின் முடிவை அறிவிக்க பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த நேரத்தில், இந்த விவகாரம் கூட்டமைப்பின் எல்லைக்குட்பட்டது அல்ல என ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மின்னஞ்சல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அவசரக் கூட்டம் நடத்தி, இனி ரன்வீர் சிங் நடிக்கும் படங்களில் பணியாற்ற மாட்டோம் என்று ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தது. இந்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com