'எமர்ஜென்சி' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! கங்கனா அறிவிப்பு

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கங்கனா அறிவித்துள்ளார்.
'எமர்ஜென்சி' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! கங்கனா அறிவிப்பு
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படம் இன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது, சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த காரணத்தினால் தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில்  'நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி ' எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com