

சென்னை,
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பட்டாசு ஆலையில் இதுவரை 23 பேர் இறந்த செய்தியால் இதயத்தைக் கரும்புகை சூழ்கிறது. மனித உடல்களை வெடித்துத் தீபாவளி கொண்டாடியிருக்கிறது விபத்து. எங்கள் பாமரத் தாய்மார்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை செய்யும் தொழிலாளிகள் சிதறிச் செத்திருக்கிறார்கள்.
ஒரு கூரையின் கீழ் இத்தனை மரணமா? உடம்பில் மாமிசமே இல்லாதவர்களை மரணம் தின்னலாமா?. வெடி மருந்துகளும் வேலையாட்களும் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். இது பாடம் பட்டாசு ஆலைகளில் உயிர்காப்பு விதிகள் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரசு - ஆலை அதிபர் பணியாளர் - வேதிப் பொருட்கள் என்ற நான்கும் ஒருங்கிணைக்கப்பட்டு உயிர்காக்கப்பட வேண்டும். இறந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பது மரபாகிவிட்டது. இரங்கலும் இறத்தலும் இதுவே இறுதியாக இருக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.