

மும்பை,
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது. ஹிருத்திக்கை தனது முன்னாள் காதலர் என்று கங்கனா விமர்சித்து இருந்தார்.
ஆனால், கங்கனாவை காதலிக்கவில்லை என்று ஹிருத்திக் மறுத்தார். இதனால் இருவரும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் கங்கனா தனக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக ஹிருத்திக் ரோஷன் வழக்கு தொடர்ந்தார். கங்கனா வெளியிட்ட பதிவில் ஹிருத்திக் மீண்டும் அழ ஆரம்பித்து இருக்கிறார். எங்கள் காதல் முறிவு, அவரது திருமண விவாகரத்து நடந்து பல வருடங்கள் ஆகியும் அதை கடந்து செல்ல மறுக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்.
எனினும், எனது பெயரில் யாரோ சிலர் போலியான இ மெயில்களை கங்கனாவுக்கு அனுப்பியுள்ளனர் என்று ஹிருத்திக் ரோஷன் தரப்பில் கடந்த 2016ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதற்கு நேரில் வந்து பதிலளிக்கும்படி, மும்பை குற்ற பிரிவின் புலனாய்வு அமைப்பு அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இதனால், மும்பை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹிருத்திக் ரோஷன் இன்று ஆஜரானார். ஏறக்குறைய 4 மணிநேரத்திற்கு பின்னர், மும்பை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.