தரமான படைப்பை ரசிகர்கள் என்றும் தாங்கிப் பிடிப்பார்கள் - நடிகர் கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
தரமான படைப்பை ரசிகர்கள் என்றும் தாங்கிப் பிடிப்பார்கள் - நடிகர் கமல்ஹாசன்
Published on

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியேவில் அவர் கூறியிருப்பதாவது:

தரமான தமிழ் படத்தையும், திறமையான நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். இசை அமைப்பாளர் அனிருத், சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவு என தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது தான் நியாயம்.

விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கடைசி மூன்று நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீதும், என் மீதும் உள்ள அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com