"பாட்ஷா" திரைப்படம் குறித்து பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த் 'பாட்ஷா'வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை,
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 'பாட்ஷா' படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் "ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. 'பாட்ஷா' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். அன்புள்ள ரஜினி சார். 'பாட்ஷா'வுக்கு காரணம் நீங்கள்தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான்.
புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது 'பாட்ஷா' மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.






