

சமீப காலமாக சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது என நடிகை டாப்ஸி கூறினார்.
இந்திய சினிமா உலகில் ஒரு கதாநாயகியாக டாப்ஸி தனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, அதன் பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 2 இந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்த வருகிறார்.
டாப்ஸி பன்னு நடித்த ‘காந்தாரி’ படம் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
சினிமா குறித்து டாப்ஸி அளித்த பேட்டியில் “இந்தப் பிரச்சினையை நடிகர்களாலும் தயாரிப்பாளர்களாலும் மட்டுமே தீர்க்க முடியாது. சமூக வலைதளங்களில் பெண்களின் படங்கள் பரப்பப்படும் விதத்தை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பினாலும் வேறு சிலர் அதே படங்களை எடுத்து அவற்றை பெரிதாக்கி விசித்திரமான கோணங்களில் பயன்படுத்தி வைரலாக்குகின்றனர். அதற்கென ஒரு பார்வையாளர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு எதிராக பார்வையாளர்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்றார்.