

சென்னை,
விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள ‘பத்தா’ படத்தின் மகளே என்ற முதல் பாடலை கார்த்திக் நேத்தா வரிகளில் சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘VJS 56’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மகளே’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இந்த பாடலை சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.