

சென்னை,
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நியமிக்கவில்லை என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னணி இந்தியத் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் முதலில் "ஹாசன் பிரதர்ஸ்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என பெயர் மாற்றப்பட்டது.
இந்த நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து 'தர்மன்' என்ற படத்தையும், நடிகர் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தையும் தயாரித்து வருகிறது.
இதற்கிடையில், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பெயரில் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறியும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன
இந்தநிலையில், “நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம்” என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.