

சென்னை,
நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டிலேயே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதால், கவுதம் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிதிச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, படக்குழுவினர் ‘கொண்டாடுவோம் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெயரில் பிரத்யேக வங்கிக் கணக்கைத் தொடங்கி, படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் கடன்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜூன் 15, 2026-க்குள் படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகும் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், திட்டமிட்டபடி இன்று படத்தை வெளியிட முடியாததால், ஜூலை 15 வரை அவகாசம் வழங்குமாறு கவுதம் மேனன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம், இந்த ஜூலை மாதமாவது திரையரங்குகளுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.