

தஞ்சாவூர்,
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் அனுபவங்களையும், பெண்களுக்கு குஸ்தி விளையாட்டு தரும் தன்னம்பிக்கை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, 'ஜகமே தந்திரம்', 'கார்கி', 'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி', 'மாமன்', 'தக் லைப்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, "முதல்முறையாக தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். இங்கிருந்துதான் படத்தின் புரமோஷனை தொடங்குகிறோம். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. இந்தப் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அவர்களை கொண்டாடும் படமாகவும் அமைந்துள்ளது. குஸ்தி கற்றுக்கொண்டால் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். இதுபோன்ற படங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால், "'கட்டா குஸ்தி 2' திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. நாங்கள் செல்லும் அனைத்து பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறோம்" என்று தெரிவித்தார்.