விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கோவிந்தா

பாலிவுட் நடிகர் கோவிந்தா விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தனது மனைவியுடன் ஒன்றாக வந்து விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது. சுனிதா அஹுஜா விவாகரத்து கேட்டு மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும், விசாரணைக்கு சுனிதா சரியாக ஆஜராவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சுனிதாவும், கோவிந்தாவும் தனித்தனியாக வசிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கோவிந்தா தனியாக வசிப்பதை ஏற்கெனவே சுனிதாவே ஒரு முறை தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு கோவிந்தா வீட்டுக்கு தாமதமாக வருவதால் அவர் தங்களது வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் வெளியாகி இருந்த செய்தி மிகவும் பழையது என்றும், அவர்கள் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்தது உண்மைதான் என்றும், அதன் பிறகு அவர்களுக்குள் இருந்த பிரச்னை சரியாகிவிட்டதாக இருவரின் வழக்கறிஞர் லலித் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் ஒன்றாக தோன்றுவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கறிஞர் சொன்னது போன்று இன்று கோவிந்தாவும், அவரது மனைவி சுனிதாவும் பத்திரிகையாளர்கள் முன்பு ஒன்றாக தோன்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததோடு பேட்டியும் கொடுத்தனர்.
“விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விநாயகர் சதுர்த்தியன்று ஒன்றாக வந்திருக்கிறோம். எங்களுக்குள் எந்த சர்ச்சையும் கிடையாது” என்று கோவிந்தாவின் மனைவி சுனிதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கோவிந்தாவும், அவரது மனைவியும் காதலித்து 1987-ம் ஆண்டு திருமணம் செய்து அதனை ரகசியமாக வைத்திருந்தனர். ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் அவர்கள் தங்களது திருமணத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர்.






