

சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை முதலில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'தலைவர் 173 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்காத நிலையில் பிற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், மேலும் ரஜினிகாந்த் இணையும் முதல் நாளே, மாஸான ஓப்பனிங் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.