

சென்னை,
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள `சிக்மா' படம் வரும் ஜூலை 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில், பிரபல சீரியல் நடிகர் ஜெமினி மணி முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜேசன் சஞ்சய் - ஜெமினி மணி குறித்த வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன், நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் "எங்க அப்பாவுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ பாத்து என்ன காருக்கு கடத்திட்டு போயிட்டாங்க. இத நான் மறந்துட்டேன்டா. ஏப்ரல் மாசம் நான் உங்க அப்பா கூட ஷூட் பண்றப்போ அவரே வந்து நான் தான் அன்னைக்கு உங்களை தூக்கிட்டு போனதுன்னு அவரே வந்து நியாபகபடுத்துறார்" எனப் பேசியிருந்தார்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை ஜெமினி மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அதில் "ஜேசன் அடையாறு பள்ளியில் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நான் ஜெமினியில் பணியாற்றினேன். எங்களுடைய எம்டியின் மகனும் அந்தப் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார், அவரை அழைத்துவர நான் அங்கு செல்வேன். ஜேசனை அழைத்து செல்ல வாரத்தில் 2,3 முறையாவது தளபதி வந்துவிடுவார். சில நாட்களில் டிரைவர் இல்லாமல் தளபதி மட்டும் வருவார். அப்படி ஒருமுறை ஜேசனை அழைத்து செல்ல தளபதி மட்டும் வந்திருந்தார்.
வாட்ச் மேன் ஜேசனை அழைத்து சென்று விஜய் சாரின் காரில் விட வேண்டும். அந்த சமயத்தில் நான் ஜேசனை தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினேன். காருக்கு சென்றால் கதவை திறந்ததும் தளபதியை பார்த்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு. இந்த விஷயத்தை ஒரு வருடமாக திட்டமிட்டேன். நினைத்த படியே காரில் சென்று அவரை ஏற்றும் போது விஜய் சாரை பார்த்தேன். அவரும் என்னை பார்த்து `ஏன் இப்படிலாம்?' என்பது போல சைகை செய்து, பின்பு பாய் சொல்லி கிளம்பிவிட்டார்." என்றார். இப்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வைரல் வீடியோ இந்த வதந்திகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்