90 வயதிலும் ஆரோக்கியம்: சவுகார் ஜானகி மலரும் நினைவு

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி தனது சினிமா வாழ்க்கை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.
நடிகை சவுகார் ஜானகி
நடிகை சவுகார் ஜானகி
Published on

அவர் கூறியதாவது:-

சங்கரமஞ்சி ஜானகி என்ற எனது பெயர் சவுகார் படத்தில் நடித்த பிறகு சவுகார் ஜானகியாக மாறிவிட்டது. நான் 90 வயதை நெருங்குகிறேன். இப்போதும் எனது வேலைகளை நானே செய்கிறேன். 74 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்தேன். சவுகார் பட வசனத்தை தூக்கத்தில் எழுப்பி இப்போது கேட்டாலும் சொல்வேன். எனக்கு 15 வயதிலேயே பால்ய விவாகம் நடந்தது. விஜயவாடாவில் குடியேறினோம். கணவருக்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். சென்னை வந்து தங்கி பல சோதனைக்கு பிறகு சவுகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் தந்தனர். குடும்ப கஷ்டத்தில் இருந்து மீளத்தான் சினிமாவுக்கு வந்தேன். சிவாஜி கணேசன் ஆதரவு தந்தார். புதிய பறவை படத்தில் கவர்ச்சியாக நடித்த காட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. 500 படங்களிலும், 300 நாடகங்களிலும் நடித்து இருக்கிறேன். வருடத்துக்கு 20 படங்களில் நடித்தேன்.

முன்பெல்லாம் காப்பி அதிகம் குடிப்பேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டு தேன், இஞ்சி பொடி, சீரக பொடி கலந்து தண்ணீர் குடிக்கிறேன். ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறேன். எனக்கு சமையல் தெரியும். நானே சமைத்து எல்லோருக்கும் பரிமாறுகிறேன். தயிர், வாழைப்பழம், பருப்பு வகைகள் சாப்பிடுகிறேன். வெண்ணெய், பால் அளவோடு எடுத்துக்குவேன். பசி இல்லாவிட்டால் பழம் மட்டும் சாப்பிட்டு படுத்துக்கொள்வேன். எனது நல்ல பழக்கத்தால் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் எதுவும் இல்லை. இரண்டு முழங்கால் ஆபரேசன் செய்தேன். இருதய அறுவை சிகிச்சையும் நடந்தது. ஆனாலும் எனது வேலையை நானே செய்து கொள்கிறேன். வீட்டு வேலைதான் எனது உடற்பயிற்சி, கடவுள் மீது பக்தி உள்ளது.'' இவ்வாறு சவுகார் ஜானகி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com