"நாயகன்" படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கியிருந்தார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸானது. இந்நிலையில் எஸ் ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, தாங்கள் நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமைய பெற்றிருந்த போதும், வி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் முறைகேடாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி என்.செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.






