

சென்னை,
‘பேராண்மை’ படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் தன்சிகா. இதனைத் தொடர்ந்து மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யோகிடா’ என்ற திரைப்படத்தில் நடித்துத் தயாராகியுள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகை சாய் தன்சிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 6-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை சாய் தன்சிகா, படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “இந்த படத்தில் 7 சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். ஆக்சன் காட்சிகளுக்கு எந்த டூப்பும் பயன்படுத்தவில்லை. ஒரு காட்சிக்காக 40 அடி உயரத்தில் தலைகீழாக கட்டி தொங்க வைத்தார்கள். பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை. நம்மாலும் எல்லாம் முடியும். தைரியமாக முன்னே வாருங்கள். பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.