‘விஜய் அழைத்தால் நான் தயார்’ - டைரக்டர் பேரரசு சொல்கிறார்

‘விஜய் அழைத்தால் நான் தயார்’ என்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைரக்டர் பேரரசு சொல்கிறார்.
‘விஜய் அழைத்தால் நான் தயார்’ - டைரக்டர் பேரரசு சொல்கிறார்
Published on

ஊர் பெயர்களில் படங்களை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டும் நடித்தார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசுவிடம் திருப்பாச்சி, சிவகாசி படங்களுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி சேரவில்லையே... விஜய்யுடன் மீண்டும் இணைவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

விஜய்க்காக நான் ஓரிரு கதைகளை தயாராக வைத்திருக்கிறேன். 3 வருடங்களாக அவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நான் தயார் தான். ஆனால் அவர் தான் என்னை அழைக்கவேண்டும். சினிமாவில் எனக்கு இடைவெளி விழுந்துவிட்டது. ஆனால் விஜய்யின் மார்க்கெட் வேறு. பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களும் வேறு. இதையெல்லாம் பார்க்கும்போது என்னை பயன்படுத்திக்கொள்ளலாமா? என்ற எண்ணம் அவருக்கு இருக்கும். இதையெல்லாம் தாண்டி பேரரசுக்கு திறமை இருக்கிறது, நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் என்று எண்ணி, அவர் அழைத்தால் நான் தயார். அதற்கான கதையும் தயாராக இருக்கிறது. அவரது முடிவை பொறுத்து தான் எல்லாமே.

இவ்வாறு டைரக்டர் பேரரசு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com