"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை" - நடிகர் சிலம்பரசன் பேச்சு

சென்னையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார்.

"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை" - நடிகர் சிலம்பரசன் பேச்சு
Published on

சென்னை,

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிம்புவிடம், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்ட கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியாது, காலம் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

‘அரசன்’ படத்தில் சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். நடிகர் மட்டுமின்றி கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட இவர், ரசிகர்களால் சிம்பு மற்றும் எஸ்.டி.ஆர் என அழைக்கப்படுகிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்ஸ் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தானு தயாரிக்கிறார்.

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளதால், ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

“சின்ன வயதில் இருந்தே அரசியலில் ஈடுபாடு இல்லை”

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிம்புவிடம், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் இருந்தே தனக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை என தெரிவித்துள்ளார். தனது தந்தை அரசியலில் சந்தித்த கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்ததாகவும், மக்களுக்காக உழைக்க நினைத்த தனது தந்தைக்கு ஏற்பட்ட சிரமங்கள் தன்னை பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அரசியல் பக்கம் தான் செல்லவில்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியாது என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். “காலம் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யின் ஆட்சி குறித்து சிம்பு கருத்து

மேலும், தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என சிம்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருடைய 100 நாள் ஆட்சி சரியாக சென்று கொண்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி இப்போதே பேசுவது சரியில்லை. அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். இப்போதைக்கு எங்கள் அண்ணன் நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளார். அண்ணனே தொடரட்டும்... அவர் அதை கண்டினியூ பண்ணட்டும்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com