

சென்னை,
‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அஞ்சலி, இந்த படத்திற்காக முதல் முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது 'மகுடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தில் விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படமாக 'மகுடம்' உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நேற்று வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எனது நெருங்கிய நண்பர் விஷால் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், இந்த படத்தின் வெற்றியால் நிச்சயம் அவர் மகிழ்ச்சி அடைவார்.
இந்த படத்தில் அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் இதுவரை நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களின் வரிசையில் அன்னபூரணியை சேர்த்துக் கொள்வேன். அந்த அளவிற்கு மிகவும் அழகான ஒரு கதாபாத்திரம்.
அதோடு தமிழ் சினிமாவில் எனது திரைப்பயணத்தில் முதல் முறையாக இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படம் விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.