

தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சர்வானந்த், தற்போது இயக்குனர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
யு.வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பைக்கர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ராஜசேகர், பிரமாஜி மற்றும் மாளவிகா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சர்வானந்த், “என் ‘கணம்’ படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் நெருக்கமான உறவு உள்ளது. இங்குள்ள மக்களின் கலை பற்றும், அர்ப்பணிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “என் பெரும்பாலான படங்கள் வெவ்வேறு ஜானர்களில் இருக்கும். அந்த வகையில் ‘பைக்கர்’ திரைப்படம் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். இதுவரை நான் நடித்த படங்களில் சிறந்த படம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் 20 கிலோ எடையை குறைத்தேன்” என்றும் கூறினார்.