"படத்திற்காக மட்டுமே சிகரெட் பிடித்திருக்கிறேன்" - நடிகர் சூர்யா

புகைப்பழக்கத்தை என்றுமே நான் ஆதரிக்க மாட்டேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரெட்ரோ படக்குழுவினர் படத்தின் புரமோஷனுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, புகைப்பிடிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது "படத்திற்காக மட்டுமே 'ரெட்ரோ'வில் நான் சிகரெட் பிடித்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள். ஒரு முறை தானே என ஆரம்பித்தால் கூட அதை விட முடியாது. உங்களை அது அடிமையாக்கிவிடும். புகைப்பழக்கத்தை என்றுமே நான் ஆதரிக்க மாட்டேன். இது என் வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.