

சென்னை,
சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் கிருத்திகா உதயநிதி, இதுவரை வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இடையில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த பதிவில், ``நீங்களும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதும் சேர்ந்துதான் பிரபலம் என்ற அந்தஸ்தை கொடுக்கிறது. ஆனால் எப்போது நீங்கள், “மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான்’’ என நினைக்க தொடங்கி, உங்கள் சுயத்தை கைவிடுகிறீர்களோ, அப்போது நீங்கள் பெரும் பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் படி உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தனது பதிவில் கிருத்திகா உதயநிதி எந்த நபரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு பலராலும் கவனம் பெற்ற நிலையில் அந்த பதிவிற்கு தற்போது கிருத்திகா உதயநிதியின் கணவரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கமெண்ட் செய்துள்ளார். அதாவது கிருத்திகா உதயநிதி பைக் ஓட்டும் ஒரு வீடியோவை பகிர்ந்து, “நீங்கள் ஒரு பெரிய செலிபிரிட்டியாக இருக்கலாம். ஆனால் வண்டியை பாத்து ஓட்டணும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.