நான் நடிகனாவேனா என்பது “சிக்மா” படத்திற்கு பின் தெரியும் - இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31 வெளியாகவுள்ளது.
நான் நடிகனாவேனா என்பது “சிக்மா” படத்திற்கு பின் தெரியும் - இயக்குநர் ஜேசன் சஞ்சய்
Published on

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் திரைப்படமான ‘சிக்மா’ குறித்து பேசியுள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ‘சிக்மா’ படத்தின் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய் நடனமாடியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனரான ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’படம் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைவராக இருக்கும் லைகா தயாரித்து உள்ளது. அடுத்ததாக ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தையும் தமிழ் குமரன் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், “சினிமாவை தேர்வுசெய்தபோது பெற்றோர், சகோதரி, நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் நேர்மறையான கருத்துகளைச் சொன்னதுடன் என்னை ஊக்கப்படுத்தினார்கள். மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வாழ்த்தினர். இளம் வயதிலேயே இயக்குநரானதால் நான் காதல் கதைகளைத்தான் இயக்குவேன் என நினைத்தனர். ஆனால், இருவரைக் காதலிக்க வைப்பதைவிட, ஒரு கேங்ஸ்டர் குழு அட்வெஞ்சராக கொள்ளையடிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. ‘சிக்மா’ படத்தில் அதைத்தான் எடுத்திருக்கிறேன்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எனக்கு கதை சொன்ன போது வேண்டாமென மறுத்தேன். காரணம், என்னால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்கிற பயம் இருந்தது. ஆனால், அவர் என்னை அணுகியது பெருமையைக் கொடுத்தது. இயக்குநர்களுக்குள் எப்போதும் ஒரு நடிகன் இருந்துகொண்டே இருப்பான். நான் நடிகனாவேனா என்பது சிக்மாவுக்குப் பின் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com