

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நிதி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன்', 'பூமி', 'கலகத்தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதி அகர்வாலிடம், 'உங்களை ராசியான நடிகை என்று திரையுலகில் புகழ்கிறார்களே...' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதி அகர்வால், "புகழ்ச்சி, விமர்சனங்கள் என நான் எதையும் கண்டு கொள்ளாத ஆள். புகழ்ச்சியை எப்போதுமே தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். ஏனெனில் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்.
நடித்த படங்கள் 'ஹிட்' ஆனால் மகிழ்ச்சி. இல்லையெனில் அதற்கான காரணத்தை ஆராய்ந்து என்னை திருத்திக்கொள்வேன். மற்றபடி நான் அதிர்ஷ்டத்தை நம்புவதை காட்டிலும் திறமையை மட்டுமே அதிகம் நம்புகிறேன்" என்று கூறினார்.