

நடிகர் எம். எஸ். பாஸ்கர் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி மனதில் நிற்க வைப்பவர் என்பதால் காத்திரமான கதைகளுக்கு எம். எஸ். பாஸ்கரை அணுகுவதையே பல இயக்குநர்கள் விரும்புகின்றனர்.
இவர் நடிப்பில் உருவான ‘பார்க்கிங்’ திரைப்படம் தேசிய விருதுகள் பெற்றதுடன் அப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் எம். எஸ். பாஸ்கர் வென்றார். தற்போது, நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய எம். எஸ். பாஸ்கர், “சினிமாவில் நான் கடைபிடிக்கும் விஷயம் என்னவென்றால், இரட்டை அர்த்தங்களைப் பேச மாட்டேன். அதே போல், பிற மதங்களை அவதூறாக பேசுவதும், கடவுள் இல்லை என்றும் பேச மாட்டேன். ஒருமுறை ஓர் திரைப்படத்தில் புறம்போக்கு என கெட்ட வார்த்தையைப் பேசினேன். சாதாரண வார்த்தையான அதை கெட்ட வார்த்தையாக மாற்றிவிட்டோம்.ஒருநாள் சிறுவன் ஒருவரை இன்னொருவர் அந்த வார்த்தையைச் சொல்லி திட்டுவதைப் பார்த்தேன். அப்போதிலிருந்து, கெட்ட வார்த்தைகளைப் பேசக்கூடாது என முடிவு செய்தேன். இன்றுவரை இவற்றைக் கடைபிடிக்கச் செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.