விரைவில் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் - இயக்குனர் ஸ்ரீகணேஷ்

அஜித் சாரை வைத்து படம் இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று இயக்குனர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஸ்ரீ கணேஷ். இவர் முதன் முதலில் 'எட்டு தோட்டாக்கள்' என்ற படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அதர்வா நடிப்பில் 'குருதியாட்டம்' என்ற படத்தை இயக்கினார்.
தற்போது சித்தார்த்தை வைத்து '3 பிஎச்கே' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், '3 பிஎச்கே' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் கலந்து கொண்டார். அப்போது நீங்கள் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், "'அஜித் சாருக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டுமென்றால் நானும் வளர வேண்டும். அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய தரமான படங்களை இயக்கி என்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு, அதன் பிறகு அஜித்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன்'' என்று தெரிவித்துள்ளார்.






