‘சுப்ரமணியபுரம் 2’ எடுக்க மாட்டேன்.. சசிகுமார் சொன்ன காரணம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம் ‘சுப்ரமணியபுரம் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

‘சுப்ரமணியபுரம் 2’ எடுக்க மாட்டேன்.. சசிகுமார் சொன்ன காரணம்
Published on

சென்னை,

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமார், 18 ஆண்டுகள் கடந்தும் இப்போதும் ரசிகர்கள் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த வரவேற்பை கெடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும். இப்படத்தை சசிகுமார் எழுதி, தயாரித்து, இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வலுவான கூட்டணி

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய், சுவாதி, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார். வேலையில்லாத நண்பர்கள் குழு வன்முறை, துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றில் சிக்கிக் கொள்வதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருந்தது.

விருதுகளை குவித்த படம்

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’, 56-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த தமிழ் இயக்குநர் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது. இதன் காரணமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

“சுப்ரமணியபுரம் 2 இயக்கவில்லை”

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம் ‘சுப்ரமணியபுரம் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கவில்லை. எல்லோரும் அதன் இரண்டாவது பாகத்தை எடுக்க சொல்லித்தான் வந்தார்கள். ஆனால் அந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் ரசிகர்கள் அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த வரவேற்பை கெடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘சுப்ரமணியபுரம் 2’ திரைப்படத்தை தற்போது இயக்கும் திட்டம் இல்லை என்பதை சசிகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com