என்னை யாராவது ‘சைட்’ அடித்தால்.. அதிரடியாக பதிலளித்த ரித்திகா சிங்


என்னை யாராவது ‘சைட்’ அடித்தால்.. அதிரடியாக பதிலளித்த ரித்திகா சிங்
x

என்னுடைய மனதில் முதலில் கோபத் தீயை எழுப்பும் விஷயம், பாலியல் வன்முறை என்று ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியன அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரித்திகா சிங் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகரும் மனிதநேயத்தில் ஒளி வீசுபவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் என் மனதில் என்றும் பொக்கிஷம். ஆனால் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது எப்போதும் ரஜினிகாந்த் தான்! எத்தனை உயர்ந்த நட்சத்திரமாக இருந்தாலும், எவ்வளவு அன்பு, எவ்வளவு பணிவு, எவ்வளவு எளிமையைக் கொண்டிருக்கிறார் என்பதே ஒரு பேராச்சரியம். அவரைப் பார்க்கும் ஒவ்வொரு தருணமும், ‘எப்போதும் பணிவுடன் வாழ்வதே உண்மையான வெற்றி’ என்பதை நினைவூட்டும். புதிதாய் ஒன்றைக் கற்றுக்கொள்வதில் எனக்கு பேரார்வம் உண்டு.

என்னுடைய மனதில் முதலில் கோபத் தீயை எழுப்பும் விஷயம், பாலியல் வன்முறை. இப்படிப்பட்ட கொடூர குற்றங்களைச் செய்யும் ஒருவர், மனிதனாகவே இருக்க முடியாது. அந்த நபர்கள் மிகக் கடுமையான தண்டனையை அடைய வேண்டியவர்கள். உங்களை யாராவது சைட் அடித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறீர்கள். ‘கொஞ்சம் பக்கத்தில் வந்து பாருங்களேன்’ என்பேன். தைரியம் இருந்தால் என் அருகில் வரட்டுமே...

நான் நல்ல படங்களின் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன். திறமையானவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்களிடம் இருந்து தினமும் புதிதாகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் நடிக்கும் அனைத்து படங்களின் மொழிகளையும் கற்பதில் ஆவலாக இருப்பதால், அது எனக்கு விரைவிலேயே பழகிவிடுகிறது. அதனால் எந்த மொழியும் எனக்கு சவாலாக இல்லை. சுவாரசியமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, என் முழு ஆற்றலையும் அதில் செலுத்த விரும்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story