

சென்னை,
விஜய்யின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படத்துக்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என பெயர் வைப்பேன் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமானவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தர்மன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிம்புவின் எஸ்டிஆர் 51 என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஸ்வத் மாரிமுத்துவிடம், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை எப்படி உருவாக்குவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது: ‘விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை நான் இயக்கினால், படத்துக்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று பெயர் வைப்பேன். படத்தின் முதல் பாதி முழுவதும் அவரது சினிமா பயணத்தை மையமாகக் கொண்டிருக்கும். சினிமாவில் வெற்றிகரமாக இருந்த அவர் அரசியலுக்கு வர எடுத்த முடிவை இடைவேளைக் காட்சியாக வைப்பேன். அதன் பிறகு இரண்டாம் பாதி முழுவதும் அவரது அரசியல் பயணத்தைப் பற்றியதாக இருக்கும்’’ என்று கூறினார்.
சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய், அரசியலில் ஈடுபட முடிவு செய்தது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அந்தத் திருப்பத்தை படத்தின் இடைவேளைக் காட்சியாக வைத்தால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அஸ்வத் மாரிமுத்து கூறினார். எனினும், விஜய்யின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தொடர்பாக தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அஸ்வத் மாரிமுத்து தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். தர்மன்' திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குநராக கலக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார். பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில், மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படத்தின் மூலம் நடிகராக தயாராகி வருகிறார். விஜய்யின் பயோபிக் படம் குறித்த கேள்வி முற்றிலும் கற்பனையானது என்றாலும், அஸ்வத் மாரிமுத்து கூறிய டைட்டில் மற்றும் இடைவேளைக் காட்சிகள் விஜய் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.