

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்தது. இளையராஜா கடந்தாண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் “இன்றுடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இளையராஜாவுக்கு அஜந்தா- எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் ‘பத்மபாணி விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கி, ஒட்டுமொத்த தமிழர் உலகமே கொண்டாடும் இளையராஜாவுக்கு, தமிழக அரசு கடந்த ஆண்டு பாராட்டு விழா நடத்தியது.