தாவூத் இப்ராஹிம் கதைக்களத்தால் எனது பொருளாதார நிலை உயர்ந்தது - இயக்குநர் ராம்கோபால் வர்மா

இயக்குநர் ராம்கோபால் வர்மா, தான் தாவூத் இப்ராஹிமால்தான் பிழைப்பு நடத்துகிறேன் என்று தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாவூத் இப்ராஹிம் கதைக்களத்தால் எனது பொருளாதார நிலை உயர்ந்தது - இயக்குநர் ராம்கோபால் வர்மா
Published on

சர்ச்சை கதைகளையும், உண்மை சம்பவங்களையும் படமாக எடுத்து பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற பெயரில் இயக்கி தமிழ், கன்னட மொழிகளில் வெளியிட்டார். சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கி வெளியிட்ட ‘ரத்தசரித்திரம்’ படமும் உண்மை சம்பவம்தான். நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் கோபால் வர்மா அளித்துள்ள பேட்டியில் தாவூத் இப்ராகிமை பாராட்டியுள்ளார். அவர் தனது பேட்டியில், “தாவூத் இப்ராகிமால்தான் எனது பிழைப்பு நடக்கிறது. எனது வெற்றிக்கு தாவூத் இப்ராகிம்தான் காரணம். அவர் இல்லையென்றால் என்னால் சத்யா மற்றும் கம்பெனி போன்ற வெற்றிப்படங்களை எடுத்திருக்க முடியாது.இந்தத் திரைப்படங்கள் என்னை பாலிவுட் துறையில் தனியாக அடையாளப்படுத்தி காட்டியது. அதோடு இந்தப் படங்கள்தான் எனக்கு இப்போதும் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கதைக்களங்களால்தான் தனது வாழ்க்கையும் பொருளாதார நிலையும் உயர்ந்தது.

எனவே எனது சுயசரிதையை முதலில் அந்தத் தாதாவிற்குத்தான் அர்ப்பணித்தேன். ஆனால் வெளியீட்டாளர்கள் அந்தப் பெயரை நீக்கிவிட்டனர். 1990களில் மற்ற இயக்குநர்கள் நிழல் உலக தாதாக்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தபோது, எனக்கு ஒரு மிரட்டல் அழைப்பு கூட வந்ததில்லை. தாதாக்கள் எனது படங்களை நேசித்தனர். தாதாக்களின் வாழ்க்கையைத் திரையில் மனிதாபிமானத்துடன் காட்டியதால் அவர்கள் தன்னை ஒரு ஆத்ம நண்பராகப் பார்த்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

தாவூத் இப்ராகிமை ராம் கோபால் வர்மா பாராட்டி பேசி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். மும்பையில் இவருக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com