எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்கிய கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - இளையராஜா இரங்கல்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவிற்கு இசைஞானி இளையராஜா வீடியோ பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். #Ilayaraja #Karunanidhi
எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்கிய கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - இளையராஜா இரங்கல்
Published on

சென்னை:

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள இடத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இளையராஜா வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது.

டாக்டர் கலைஞர் அய்யா மறைந்தது நமக்கெல்லாம் துக்க தினமே தான். இந்த துக்கத்தை நாம் எப்படி ஆற்றிக்கொள்ளப் போகிறோம், எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.

அரசியல் தலைவர்களிலே கடைசி தலைவர் அய்யா கலைஞர் அவர்கள். தமிழ் சினிமா சுத்தமான தமிழ் வசனங்களை அள்ளி அள்ளி வழங்கிய கடைசி திரைக்கதை வசனகர்த்தா கலைஞர் அவர்கள்.

அரசியலாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், தமிழ் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞர் ஐயாவின் இழப்பு, உண்மையிலேயே ஈடு என்ற வார்த்தைக்கு கூட ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இந்த நேரத்தில் நான் எனது குழுவுடன் ஆஸ்திரேலியாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்துவிட்டேன். இது ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால் தவிர்க்க முடியவில்லை," என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com