

பெங்களூரு,
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை உருவக்கேலி செய்த விவகாரத்தில் நெட்டிசன்களுக்கு நடிகை ரம்யா கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடல் எடையை வைத்து விமர்சிப்பது தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை கத்ரீனா கைப், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் இந்தி நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வெளியில் தலைகாட்டாத அவர் சமீபத்தில் மும்பையில் உள்ள அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணவர் விக்கி கவுசலுடன் கலந்து கொண்டார். அப்போது அவரை புகைப்படக்காரர்கள் புகைப்படங்கள் எடுத்தனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில் நடிகை கத்ரீனா கைப் உடல் எடை கூடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை உருவக்கேலியும், கிண்டலும் செய்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கு நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"கத்ரீனா கைப்பை உருவக்கேலியும், கிண்டலும் செய்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். பெண்களை உருவக்கேலி செய்வதும், அவர்களை தரம்கெட்ட வார்த்தைகளால் விமர்சிப்பதும் தவறாகும். சமூக வலைதளம் என்பது ஒரு சிறந்த மேடை. பெண்களுக்கு இளம் பருவம், தாய்மை பருவம் என பல பருவங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் முகப்பு பக்கத்தை ஆக்கிரமித்தவர்களில் நடிகை கத்ரீனா கைப்பும் ஒருவர் என்பதை மறந்து விடக்கூடாது."
"அவர் தற்போது தாய்மை அடைந்துவிட்டார். அவருக்கு குழந்தை உள்ளது. அதனால் அவரது உடல் எடை அதிகரித்து இருக்கிறது. ஒருவேளை குழந்தை இல்லாமல் உடல் எடை அதிகரித்து இருந்தாலும் அதனால் என்ன தவறு?. அவரது வங்கி சேமிப்பு அதிகரித்து விட்டதால், உடல் எடை அதிகரித்து இருப்பதாக கூறுவதும் தவறு. ஒருவரின் உடல் எடையை வைத்து உருவக்கேலி செய்வது மிகப்பெரிய தவறு." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.