இதுவரை... இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுவா?

'ராமாயணம்' நாட்டின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளது.
சென்னை,
இந்திய சினிமா வரலாற்றில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனையை ராமாயணம் படம் படைக்க தயாராகி வருகிறது.
பிரபல இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கும் இந்த புராணப் படம், சுமார் ரூ. 835 கோடி என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாவதாக தெரிகிறது. இதன் மூலம், 'ராமாயணம்' நாட்டின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளது.
இது உணமையாகும் பட்சத்தில் இதுவரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்த 'கல்கி 2898 கி.பி' (ரூ. 600 கோடி), 'ஆர்.ஆர்.ஆர்' (ரூ. 550 கோடி), 'ஆதிபுருஷ்' (ரூ. 550 கோடி) போன்ற படங்களை இந்தப் படம் முறியடிக்கும்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் இந்த படத்தில் ராமராக நடிக்கிறார், தென்னிந்திய நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார்.
'கேஜிஎப்' புகழ் யாஷ் ராவணனாக நடிக்கிறார். அவர்களுடன், சன்னி தியோல், விவேக் ஓபராய், ராகுல் பிரீத் சிங், லாரா தத்தா, காஜல் அகர்வால், அருண் கோவில், ஷீபா சதா போன்ற நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் கடந்த 3-ம் தேதி வெளியிட்டனர். இப்படத்தின் முதல் பாகத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கும் 2-ம் பாகத்தை 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.