

ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு சிறுவயதில் கமல்ஹாசன் போஸ்டர்களில் சாணி அடித்து இருக்கிறேன் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துகள் பதிவிட்டனர்.
இதனால் கமல்ஹாசனை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்தார். ஆனாலும் எதிர்ப்பு தணியவில்லை. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் டுவிட்டரில் பதிவிடும் கருத்துகள், எனது பேச்சுகள், இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துகள்தான். எனது கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்தவகையிலும் பொறுப்பு இல்லை. ரஜினிகாந்த் சொல்லித்தான் நான் பேசுகிறேன் என்று சிலர் சொல்வதில் உண்மை இல்லை.
அவர் பேச விரும்பும் விஷயங்களை அவராகவே பேசுவார். ஒருவரை தூண்டி விட்டு பேச வைப்பவர் ரஜினி அல்ல. என்னால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. ஒரு ரசிகனாக ரஜினிகாந்திடம் நான் எதிர்பார்ப்பது ஆசிர்வாதமும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும்தான் எதிர்பார்க்கிறேன்.
எந்த அரசியல் கட்சிக்கும் நான் எதிரானவன் இல்லை. யாரையும் ஆதரிக்கவும் இல்லை. சமூக சேவை செய்து வருகிறேன். அரசியலில் தொடர்பு இல்லை. எனது பிறந்த இடம், மொழி மற்றும் சேவைகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கெல்லாம் அமைதியாக பதில் அளிப்பேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.