

சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களைச் சுற்றி எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினி, அடுத்து தனது 173-வது படத்தில் இணையவுள்ளார்.
'தலைவர் 173' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்தப் படம் 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து கைக்கு மாற வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் நடிகை ஷோபனா அல்லது சிம்ரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, ஒரு கவுரவத் தோற்றத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது நடந்தால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினி-கமல் கூட்டணியை திரையில் பார்க்கலாம்.
எல்லாவற்றையும் விட ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காகத் திரையுலகமே வியக்கும் ஒருவரை சிபி தேர்வு செய்துள்ளார். பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க ஆலோசனைகள் நடந்து வருகிறதாம். இதுவரை திரைக்குப் பின்னால் பிரமாண்டங்களைக் காட்டிய ஷங்கர், திரையில் ரஜினிக்கு எதிராக மோதினால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.