

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 47 என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுடன், பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 'ஆவேஷம்' போன்ற ஒரு மாஸ் எனர்ஜியான படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கும் ஜித்து மாதவன், சூர்யாவை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்திருக்கிறது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யா 47படம் தமிழ் படமா.. மலையாளப் படமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதுகுறித்த கேள்வி, கொச்சி ஏர்போர்ட்டில் வைத்து ஜித்து மாதவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜித்து மாதவன், "`சூர்யா 47' படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார். மேலும், இது ஒரு தமிழ்ப் படம் என்பதையும் உறுதிபடுத்தி இருக்கிறார்.