

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஒரு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பு சாட்டிலைட் கன்ட்ரோலில் இருக்கும் என்றும், அந்த சாட்டிலைட் பாஜக கன்ட்ரோலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.
இந்நிலையில் 2017ம் ஆண்டு ரிலீஸான ‘நிசப்தம்’ படத்தை இயக்கிய மைக்கேல் அருண் ஜனநாயகன் லீக் பைரஸி இல்லை என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் “ஜனநாயகன் கசிவுக்கு அந்த டீமின் அஜாக்கிரதையே காரணம் என்கிறார் மைக்கேல் அருண். கசிந்த ப்ரிண்ட்டில் EDIT_REF 14012026 என்று இருப்பது எடிட்டர் 14-01-2026 அன்று உருவாக்கிய அவுட்புட் என்றும், அது கசிந்திருந்தால் அது படக்குழுவின் அஜாக்கிரதை மட்டுமே என்கிறார் அவர்.
ஒரு கன்னட மாஸ் ஹீரோவின் இரண்டு படங்களில் இணை இயக்குநராக வேலை செய்தாராம் மைக்கேல் அருண். இணை இயக்குநராக இருந்தபோது புட்டேஜ்களை டிஜிட்டல் முறையில் லேப்டாப் மூலம் வேலை செய்ய வேண்டியிருக்குமாம். சிஜி, டப், ஆர்ஆர், டிஐ,மிக்சிங் செக், சிஜி செக், பைனல் பிலிம் செக் செய்ய பல முறை புட்டேஜை ஆக்சஸ் செய்ய வேண்டி முழு புட்டேஜும் கையில் இருக்கும்போது எல்லாம் நெருப்பு மீது இருப்பது போன்று இருக்கும்.
எல்லா வேலையையைும் முடித்து அந்த புட்டேஜை அழித்த பிறகே மூச்சு வந்து இயல்பு நிலைக்கு வருவோம். புட்டேஜ் ஆக்சஸ் செய்யும் அந்த படத்தில் வேலை செய்யும் அனைவருக்குமே இந்த மனநிலை தான் இருக்கும். கோடிகளில் முதலீடு செய்ததுடன், பலரின் உழைப்பு அடங்கியது. இதில் நாம் அஜாக்கிரதையாக இருந்தால்... இழப்பு பெருமளவில். இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமானால் யார் மீது தெரிவிக்க வேண்டும். அதை அரசியலாக பார்க்கவே முடியாது... இது முழுக்கு முழுக்க யாரோ ஒருவருடைய அஜாக்கிரதையால் ஏற்பட்டது அல்லது இத்திரைப்படத்தில் சொல்ல விரும்பிய கருத்தாக்கத்தின் காலம் கடக்கின்றது என்ற மனநிலையில் அந்த கருத்தாக்கங்களை லீக் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க முற்படுவதாக மட்டுமே பார்க்க முடிகின்றது
அந்த அவுட்புட் தேதியை வைத்து விசாரித்து trail செய்யலாம்... குற்றவாளியை கண்டுப்பிடிக்கலாம்...அந்த படத்தை யாரும் டவுன்லோடு செய்து பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இது தேர்தல் களம் என்பதால் கோரிக்கைக்கு எல்லாம் மதிப்பு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. புட்டேஜ் குறியீட்டை வைத்து அது யார் மூலம் கசிந்திருக்கும் என்பதை தயாரிப்பாளரும், படக்குழுவும் விசாரணை நடத்தி மக்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டிய நிலை. இது அரசியலாக்கப்பட்டதால்...உண்மை வெளியே வருகிறதா என பார்க்கலாம் ” என மைக்கேல் அருண் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .