'சூர்யா 45' படத்தின் டைட்டில் இதுவா?


சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுவா?
x

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'பேட்டைக்காரன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story